Wednesday, February 22, 2012

விரைவில் அறிவிப்பு வெளியாகிறது ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு அனுமதி அளித்தது தமிழக அரசு

சென்னை : பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, தகுதித் தேர்வு நடத்தும் நாள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தின்போது வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் நியமனங்கள் வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில், புதியதாக ஆட்சிக்கு வந்துள்ள அதிமுக அரசு, கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை காரணம் காட்டி, ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு நடத்தப் போவதாக அறிவித்தது. 

இதுகுறித்து, சட்டப்பேரவையில் முதல்வர் பேசுகையில், இந்த ஆண்டு 50,000 ஆசிரியர்கள் நியமிக்கப் போவதாக அறிவித்தார். 1 முதல் 5ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு பிரிவாகவும், 6 முதல் 8ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒரு பிரிவாகவும் இந்த தகுதித் தேர்வுகள் நடக்க உள்ளது. இந்த தேர்வை எப்படி நடத்துவது என்பதில் இதுவரை குழப்பம் நீடித்து வந்தது. இந்நிலையில், இப்போது தகுதித் தேர்வு நடத்துவதற்கான அனுமதியை அரசு வழங்கியுள்ளது. இதையடுத்து, தகுதித் தேர்வு குறித்த முழு விவரம் அரசு கெசட்டில் வெளியிட உள்ளனர்.

இதன்படி தமிழ், ஆங்கிலம், சுற்றுச்சூழல், குழந்தைகள் மேம்பாடு ஆகியவை பொதுவாக வைக்கப்படுகிறது. இவற்றில் இருந்து இடம் பெறும் கேள்விகளுக்கு எல்லோரும் விடை அளிக்கவும், பின்னர் பாடங்களுக்கு ஏற்ப தனித்தனியாக விடை அளிக்கும் வகையிலும், தேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் ஆலோசனை தெரிவித்தது. ஆனால், என்சிஇஆர்டி நடத்தும் தேர்வு விதிகளை அடிப்படையாக கொண்டே தகுதித் தேர்வு நடத்த வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது. 

எனவே, என்சிஇஆர்டி நடத்தும் தேர்வு போலவே ஆசிரியர் தேர்வு வாரியம் தகுதித் தேர்வை நடத்த உள்ளது. ஆனால், ஒவ்வொரு பாடத்துக்கும் தனித்தனியாக கேள்விகள் அமையா மல் 3 பிரிவுகளில் பாடங் களை பிரித்து அதற்குரிய கேள்விகள் இடம் பெற உள்ளன. அதனால் வரலாறு, புவியியல் பாடங்களை படித்தவர்களும் கணக்கு, அறிவியல் பாட கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டிய நிலை ஏற்படலாம். பட்டதாரிகள் உஷாராக இருக்க வேண்டும்.

Tuesday, February 21, 2012

பட்டதாரி ஆசிரியர்களுக்கு இனி போட்டித் தேர்வு - அரசாணை வெளியீடு-24-11-2011

5 முதல், 10ம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் போட்டித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்; இடைநிலைக் கல்வி ஆசிரியர்கள், உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை, பதிவு மூப்பு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கான கட்டாய மற்றும் இலவச கல்விச் சட்டத்தை, அரசிதழில், தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 6 முதல், 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு கட்டாயக் கல்வி அளிக்க, இச்சட்டம் வழிவகை செய்கிறது. கட்டாயக் கல்விச் சட்டப்படி, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை, தகுதி தேர்வு நடத்தி தான், மாநில அரசுகள் நியமித்தாக வேண்டும்.
இந்நிலையில், "தமிழகத்தில், மாநில அளவிலான வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில், இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்" என, 2008ல், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுதொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், ஆசிரியர் நியமனம் தொடர்பாக, தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவு:
இடைநிலை ஆசிரியர்களைப் பொறுத்தவரை, உச்ச நீதிமன்ற இறுதி தீர்ப்பு வரும் வரை, மாநில அளவிலான வேலைவாய்ப்பு, பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் செய்யப்படும். பட்டதாரி ஆசிரியர்களை பொறுத்தவரை, அனைத்து நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு, எழுத்துத் தேர்வு அடிப்படையில், நியமனம் செய்யப்படுவர்.
இந்த ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்தி, ஆசிரியர்களை நியமிக்கும் பணியை, ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொள்ளும். தேசிய கவுன்சில் வகுத்துள்ள கல்வித் தகுதி உள்ளவர்கள் தான், ஆசிரியர் தகுதித் தேர்வில் கலந்து கொள்ள முடியும்.
தேர்வு முறை
* தேர்வில், அனைத்து கேள்விகளும், நான்கு பதில்களில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு கேள்விக்கும், ஒரு மதிப்பெண் அளிக்கப்படும்.
* இரண்டு வகையான தேர்வுகள் நடத்தப்படும். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பாடம் எடுக்க உள்ளவர்களுக்கு ஒரு தாளும் (முதல் தாள்), ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் எடுக்க உள்ளவர்களுக்கு ஒரு தாளும் (இரண்டாம் தாள்) இடம்பெறும். எந்த வகுப்பு வேண்டுமானாலும் எடுக்க தயாராக உள்ளவர்கள், இரண்டையும் எழுத வேண்டும்.
* முதல் தாள், மொத்தம் 150 கேள்விகளைக் கொண்டதாகவும், ஒன்றரை மணி நேரம் அவகாசம் கொண்டதாகவும் இருக்கும்.
* இரண்டாம் தாள், 150 கேள்விகள் கொண்டதாகவும், ஒன்றரை மணி நேரம் அவகாசம் உள்ளதாகவும் இருக்கும்.
* அறிவியல் ஆசிரியர்களுக்கு, கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் இருந்து 60 கேள்விகளும், சமூக அறிவியல் பாட ஆசிரியர்களுக்கு, அதில் இருந்து 60 கேள்விகளும் கேட்கப்படும்.
* தேர்வில் 60 சதவீத மதிப்பெண் பெறுவோர், தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர். எனினும், பள்ளி நிர்வாகம், அரசு, உள்ளாட்சி அமைப்புகள் போன்றவை, ஆதிதிராவிடர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோருக்கு, இடஒதுக்கீடு கொள்கையின்படி, சலுகைகள் வழங்கலாம். இவ்வாறு, உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டாய கல்விச் சட்டப்படி, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலை, கல்வியியல் ஆணையமாக மத்திய அரசு நியமித்துள்ளது. இந்த ஆணையம், அனைத்து மாநிலங்களிலும் தொடக்கக் கல்விக்கு, ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தி தான் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என உத்தரவிட்டு, இதற்கான வழிமுறைகளையும் வகுத்துள்ளது.
இதன்படி, ஐந்தாம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்கள், குறைந்தபட்சம் டி.டி.இ.டி., (ஆசிரியர் கல்வி பட்டயப் படிப்பு) பெற்றிருக்க வேண்டும். ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான வகுப்புகளை எடுக்கும் பட்டதாரி ஆசிரியர்கள், பி.எட்., படிப்பு முடித்திருக்க வேண்டும்.
இதுதவிர, இவர்கள் ஆசிரியர் தகுதி தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், ஆணையம் வகுத்துள்ள குறைந்தபட்ச தகுதி இல்லாத ஆசிரியர்கள், ஐந்து ஆண்டுகளுக்குள், அந்த தகுதியை பெற வேண்டும்.

குழப்பத்தில் ஆசிரியர்களும், ஆசிரியர் தேர்வு வாரியமும் -01-12-2011

குழப்பத்தில் ஆசிரியர்களும், ஆசிரியர் தேர்வு வாரியமும் -01-12-2011

ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக வெளியான தமிழக அரசின் அறிவிப்பு, ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலவச மற்றும் கட்டாயக் கல்விச் சட்டத்தின்படி, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான பாடங்களை நடத்தும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், மத்திய அல்லது மாநில அரசுகள் நடத்தும், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். புதிய ஆசிரியர் நியமனத்திற்கு, இந்த வகை தேர்வு தேர்ச்சியை ஒரு தகுதியாகக் கொண்டு, தேர்வு செய்ய வேண்டும்.
அதன்படி, இந்த வகை தேர்வை, தமிழக அளவில், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.
குழப்பங்களுக்கான காரணம்* ஆசிரியர் தகுதித் தேர்வு மூலமே, இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர் என, அரசாணையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், தேர்வு முறையில், வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பும் கணக்கில் கொள்ளப்படுமா என்பது குறித்து, எதுவும் அறிவிக்கவில்லை.
* ஆசிரியர் பயிற்றுனர்கள், தொடர்ந்து போட்டித் தேர்வு மூலமே தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இந்த வகை ஆசிரியர்கள், வழக்கமான போட்டித் தேர்வுடன், ஆசிரியர் தகுதித் தேர்வையும் எழுத வேண்டுமா அல்லது ஆசிரியர் தகுதித் தேர்வை மட்டும் எழுதினால் போதுமா என்பது குறித்தும் அறிவிப்பு கிடையாது.
* ஆசிரியர் தகுதித் தேர்வில், 60 சதவீத மதிப்பெண்கள் எடுத்தவர்கள், தகுதி பெறுகின்றனர் என்றால், காலிப் பணியிடங்களை விட அதிகமானவர்கள், 60 சதவீதத்திற்கும் அதிகமாக மதிப்பெண் எடுத்தால், அவர்களின் நிலை என்ன என்பது தெரியவில்லை.
அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தென்னிந்திய செயலர் அண்ணாமலை இது குறித்து கூறும்போது, "அரசாணையில், சில குழப்பங்கள் இருப்பது உண்மை தான். ஆசிரியர் தகுதித் தேர்வு என்பது, ஆசிரியர் தேர்வு முறையில் உள்ள ஒரு தகுதியாக இருக்க வேண்டும் என்று தான், மத்திய அரசு சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த வகை தேர்வு மூலமே, ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் என்று கூறவில்லை" என்றார்.
மேலும், "காலிப் பணியிடங்களை விட, அதிகமான ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றால், அனைவரும், வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் தான் நியமனம் செய்யப்படுவர். பிற மாநிலங்களில் இப்படி தான் நடக்கிறது" என்றார்.
பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வின் கீழ், கணிதம் - அறிவியல் அல்லது சமூகக் கல்வி ஆகிய ஏதாவது ஒன்றின் கீழ், 60 மதிப்பெண்களுக்கும், மொழித்தாள் ஒன்றில் 30 மதிப்பெண்கள், மொழித்தாள் இரண்டில், 30 மதிப்பெண்கள் மற்றும் குழந்தைகள் மன நலன் தொடர்பாக, 30 மதிப்பெண்கள் என, 150 மதிப்பெண்களுக்கு கேள்விகளை கேட்க வேண்டும் என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதில், மொழிப்பாட ஆசிரியர்கள் என்று வரும்போது, தமிழ் அல்லது ஆங்கிலத்தில் இருந்தே, 150 மதிப்பெண்களுக்கான கேள்விகளையும் கேட்க வேண்டுமா; இவர்களிடம், கணிதம் - அறிவியல் மற்றும் சமூகக் கல்வி தொடர்பான 60 மதிப்பெண்களுக்கு, எப்படி கேள்வி கேட்பது எனத் தெரியாமல், தேர்வு வாரியம் குழப்பத்தில் இருந்து வருகிறது. இந்த குழப்பங்களுக்கு விளக்கம் கேட்டு, அரசுக்கு, தேர்வு வாரியம் கடிதம் எழுதி இருப்பதாகக் கூறப்படுகிறது. மேற்கண்ட குழப்பங்களுக்கு எல்லாம் விடை கிடைத்தால் தான், புதிய ஆசிரியர் தேர்வு முறையில் உள்ள சிக்கல்கள் தீரும்.
வட மாநிலங்களில், பட்டதாரி ஆசிரியர்களில், தமிழ் மற்றும் ஆங்கில ஆசிரியர்கள் என, தனியாக கிடையாது. பிற பாடங்களின் ஆசிரியர்களே, மொழிப் பாடங்களையும் நடத்துகின்றனர். ஆனால், தமிழகத்தில் மட்டும் தான், மொழிப் பாடங்களுக்கு என, தனியாக ஆசிரியர்கள் இருக்கின்றனர்.

ஆங்கிலம், சமூக அறிவியல் ஆசிரியர் பற்றாக்குறை-24-01-2012

தமிழகத்தில் புதிதாக துவக்கப்படும் உயர்நிலைப் பள்ளிகளுக்கு பாட வாரியாக ஆசிரியர் நியமனம் செய்யப்படும் நிலையில் அனைத்து உயர்நிலைப் பள்ளிக்கும் பாட வாரியாக ஆசிரியர் நியமனம் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தின் கீழ் 2009-10ம் ஆண்டில் 200 நடுநிலைப் பள்ளிகளும் 2010-11ம் ஆண்டில் 344 பள்ளிகளும் 2011-12ம் ஆண்டில் 710 பள்ளிகளும் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
இப்பள்ளிகளை தவிர்த்து 4,600க்கும் மேற்பட்ட அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில் 100க்கும் குறைவாக மாணவர்கள் இருப்பின், இரண்டு ஆசிரியர் பணியிடங்கள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டன. அப்பணியிடங்களுக்கும் கணிதம் மற்றும் அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களே தேர்ந்தெடுக்கப்பட்டனர். இடைநிலை ஆசிரியர்களில் பெரும்பாலானோர் தமிழ் பாடத்தில் பி.எட்., முடித்து தமிழாசிரியராக பதவி உயர்வு பெற்று விடுகின்றனர்.
இதனால் தமிழ், அறிவியல், கணிதம் என மூன்று பாடத்தில் மட்டுமே பெரும்பாலான பட்டதாரி ஆசிரியர்கள் உள்ளனர். ஆங்கிலம் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களின் எண்ணிக்கை மிக சொற்ப அளவே உள்ளதால் பெரும்பாலான பள்ளிகளில் கணிதம் அல்லது அறிவியல் பட்டதாரி ஆசிரியரே ஆங்கிலம் அல்லது சமூக அறிவியல் பாடங்களையும் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அனைத்து பள்ளிகளிலும் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு, அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில், சமூக அறிவியல் மற்றும் ஆங்கில பட்டதாரி ஆசிரியர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுத்து அனைத்து பள்ளிகளிலும் பாட வாரியான ஆசிரியர்கள் இருக்குமாறு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
அரசு பள்ளிகளில், ஆங்கிலம் மற்றும் சமூக அறிவியல் பாட ஆசிரியர் எண்ணிக்கை, மிக குறைவாகவே உள்ளது. உரிய பாடத்தில் பயிற்சி பெற்றவர்கள் நியமிக்கப்படும் போது கல்வித் தரம் மேலும் மேம்பட்டதாக இருக்கும். ஆங்கிலம் மற்றும் சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு அதிக எண்ணிக்கையில் வாய்ப்பளிக்க வேண்டும். இதற்கேற்ப தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர் நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.