Tuesday, February 14, 2012

உதவி தொடக்க கல்வி அலுவலர் பதவிக்கு போட்டோ போட்டி!-14-02-2012

சென்னை: உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பதவிக்கான, 34 பணியிடத்திற்கு, 66 ஆயிரத்து 957 பேர் போட்டியிடுகின்றனர்.
தொடக்கக் கல்வித் துறையில் காலியாக உள்ள, 34 உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடங்கள், போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இந்த தேர்வு, வரும் 19ம் தேதி நடைபெறுவதாக இருந்த நிலையில், அதே நாளில், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையின் தேர்வுகள் இருப்பதால், பிப்., 26ம் தேதிக்கு மாற்றம் செய்யப் பட்டுள்ளது.
இதற்கிடையே, தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில், 1,548 பேரின் விண்ணப்பங்களை, ஆசிரியர் தேர்வு வாரியம் நிராகரித்துள்ளது. இதற்கான காரணங்களையும் சம்பந்தப்பட்டவர்களுக்கு, இணையதளம் மூலம் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. மீதமுள்ள, 66 ஆயிரத்து, 957 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளதாக தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
பாட வாரியாக, தமிழ் - 10,926; ஆங்கிலம் - 8,534; கணிதம் -15,498; இயற்பியல் - 7,250; வேதியியல் - 8,612; தாவரவியல் - 3,869; விலங்கியல் - 5,106; வரலாறு - 6,230; புவியியல் - 932 பேர், இத்தேர்வை எழுத உள்ளனர்.
ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட தேர்வு மையங்களிலேயே, தேர்வு நடைபெறும் என்றும், இவர்களுக்கான ஹால் டிக்கெட் வரும் 20ம் தேதிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு பணிகள் ஜரூர்!-14-02-2012

சென்னை: மே இறுதியில் நடக்கவுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வுக்காக, எட்டு லட்சம் விண்ணப்பங்களை அச்சடிக்க, ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.
விண்ணப்பத்தின் விலை 50 ரூபாயாகவும், தேர்வுக் கட்டணம் 500 ரூபாயாகவும் நிர்ணயிக்க, டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளது.
கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி, எட்டாம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் தகுதித் தேர்வும், அதன் பின், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித் தேர்வும் நடத்தப்பட உள்ளது. ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள், இரண்டாம் ஆண்டு படிப்பவர்கள், பி.எட்., முடித்தவர்கள் மற்றும் படித்துக் கொண்டிருப்பவர்களுடன், 2010, ஏப்., 1ம் தேதிக்குப் பின் ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்கள் அனைவரும், தேர்வில் பங்கேற்க உள்ளனர்.
5 லட்சம் பேர்; ரூ.27 கோடி வருவாய்: குறைந்தது, ஐந்து லட்சம் முதல், அதிகபட்சம், ஆறு லட்சம் பேர் வரை தேர்வில் பங்கேற்பர் என எதிர்பார்ப்பதாகவும், கடைசி நேரத்தில், விண்ணப்பங்கள் பற்றாக்குறை ஏற்படக்கூடாது என்பதற்காக, எட்டு லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்க ஏற்பாடு செய்துள்ளதாகவும், ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
அனைத்து மாவட்ட கல்வி அலுவலகங்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில், விண்ணப்பங்களை விற்பனை செய்ய, தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. விண்ணப்பத்தின் விலை 50 ரூபாயாகவும், தேர்வுக் கட்டணம் 500 ரூபாயாகவும் இருக்கும் என்றும், தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. ஐந்து லட்சம் பேர் விண்ணப்பித்தால் கூட, தேர்வு வாரியத்திற்கு, 27.50 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும்.
பாடத்திட்டம்: இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் என, இரு பிரிவினருக்கு, தகுதித் தேர்வு நடத்தப்பட உள்ளது. ஒவ்வொரு பிரிவினருக்கும், தலா, 150 மதிப்பெண்களுக்கு, பதில் தேர்வு செய்யும் முறையில் தேர்வு நடத்தப்படும்.
தமிழ், ஆங்கிலம், உளவியல், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய ஐந்து பாடப் பிரிவுகளின் கீழ், ஒவ்வொன்றில் இருந்தும் தலா 30 மதிப்பெண்கள் வீதம், 150 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும். இதில், தேர்ச்சி பெறுவதற்கான குறைந்தபட்ச மதிப்பெண்களாக, 90 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விரைவில் ஒப்புதல்: பாடத் திட்டங்களுக்கு, தமிழக அரசிடம் ஒப்புதல் கோரப்பட்டுள்ளது. இந்த வாரத்திற்குள் ஒப்புதல் கிடைத்துவிடும் எனக் கூறப்படுகிறது. அனுமதி கிடைத்ததும், தகுதித் தேர்வு குறித்த அறிவிப்பை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடும்.